Description
பரிபாடல்
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பரிபாடல் நூல் தொகுப்பு
பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்:
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
பரிபாடல் இலக்கணம்
- தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.
- நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
- வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
- வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
- கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய 4 உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
- சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
- 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
- பரி (குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் ‘பரிபாடல்’ என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பரிபாடல் செய்திகள்
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இது, ஐந்தாவதாக வைத்து எண்ணப்படும் சங்கத்தொகை நூல்.
- ஓங்கு பரிபாடல் எனச் சிறப்பித்துக் கூறப்படும் பெருமையுடையது
- மதுரை, வையை யாறு, திருமருதந்துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை என்பவற்றின் பழங்காலச்செய்திகளைக் கூறுவது.
- பரிபாடல் என்னும் பாவகையால் அமைந்த பாடல் தொகுப்பு.(குறள்பாவால் அமைந்த ‘திருக்குறள்’ போல)
- பரிந்து வருவது, பரிபாடல் ‘பரிந்து வருவது’ என்பது, ‘ஏற்றுவருவது’ என்று பொருள்படும். ‘பல பா வடிவங்களை’ ஏற்றுவருவது என்பதாம். இனித், தெய்வவாழ்த்து என்பதையும், காமப்பொருளையும் ஏற்று வருவது என்பதால் ‘பரிபாட்டு’ எனப்பட்டது எனவும் கூறலாம். அதாவது, தெய்வம், காமம் எனும் பொருள்களை ஏற்றுவரும் பாடல் என்று பொருள்.
- இந்நூல் இசைப்பாட்டு, பழங்காலத்தில் பாடப்பெற்றது கலித்தொகை, பதிற்றுப்பத்து முதலிய தொகைநூல் பாடல்களைப்போல.
- பண்கள் வகுக்கப்பெற்றது, தேவாரம் போல.
இந்நூல் 70 பரிபாடல்களால் ஆனது என்பது, இறையனார் களவியல் உரையால் அறியப்படுகின்றது.
- இவற்றுள் திருமாலுக்கு உரியவை 08 பாடல்கள்
- முருகனுக்கு (செவ்வேள்) உரியவை 31
- காடுகிழாள் எனும் கொற்றவைக்கு 01
- வையைக்கு 26
- மதுரைக்கு 04
ஆகமொத்தம் 70 (08+31+01+26++04= 70) பாடல்கள்.
இந்நூலைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் இந்நூலுக்கும் உரை எழுதியுள்ளார்.
பரிபாடல் பாடல்களைப் பாடியோர்கள்
(கிடைத்த 22 பாடல்கள்)
- ஆசிரியன் நல்லந்துவனார்
- இளம்பெருவழுதியார்
- கடுவன் இளவெயினனார்
- கரும்பிள்ளைப் பூதனார்
- கீரந்தையார்
- குன்றம் பூதனார்
- கேசவனார்
- நப்பண்ணனார்
- நல்லச்சுதனார்
- நல்லழிசியார்
- நல்லெழுனியார்
- நல்வழுதியார்
- மையோடக்கோவனார்
இசைவகுத்தோர் (பண்வகுத்தோர்)
- கண்ணகனார்
- கண்ணனாகனார்
- கேசவனார்
- நந்நாகனார்
- நல்லச்சுதனார்
- நன்னாகனார்
- நாகனார்
- பித்தாமத்தர்
- பெட்டனாகனார்
- மருத்துவனல்லச்சுதனார்
இந்த நூலைப் பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். அவர்களுள் சிலர்,
- இளம்பூரணர்
- சங்கரநமச்சிவாயர்
- சேனாவரையர்
- தக்கயாகப்பரணி உரையாசிரியர்
- தெய்வச்சிலையார்
- நச்சினார்க்கினியர்
- நம்பியகப்பொருளுரையாசிரியர்
- பரிமேலழகர்
- பேராசிரியர்
- மயிலைநாதர்
- மாறனலங்கார உரையாசிரியர் முதலிய பலர்.
பரிபாடல் பதிப்பு வரலாறு
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்.