Description
ஏலாதி மூலமும் உரையும்
பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி. சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.
ஏலாதி பெயற்காரணம்
இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.
எடுத்துக்காட்டு பாடல்
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.
ஏலாதி குறிப்பு
ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் ‘ஏலாதி’ என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டுபங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு, என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதிநூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையான அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர்மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது.
ஏலாதியின் தன்மை குறித்துத் தமிழ்நூல்களில் விளக்கம் காணப்படவில்லை. வட மொழியில்,’ஏலாதி கிருதம், ஏலாதி சூர்ணம், ஏலாதி கணம்’ எனமூவகை ஏலாதிகள் பேசப் பெறுகின்றன. இவற்றுள் ஏலாதிசூர்ணம் என்பதுவே இந் நூல் பொருளுக்கு மிகவும் இயைந்ததாகும்.
மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் ஏலாதி சிறுபஞ்ச மூலத்தோடு பெரிதும் ஒற்றுமையுடையது. சிறுபஞ்சமூலம் ஐந்து பொருள்களை உரைக்க, இது ஆறு பொருள்களைச் சுட்டுகின்றது. மேலும், சிறுபஞ்சமூலத்தின் கருத்துச் சொற்பொருள்களை இந்நூல் பல இடங்களில் அடியொற்றியுள்ளது. இரு நூல்களின் ஆசிரியரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர். இருவரும் மாக்காயனார் என்பவரிடம் தமிழ் ஓதியவரே. வட சொல்லாட்சி சிறுபஞ்சமூலத்தைப் போன்றே இந் நூலிலும் சற்றுமிகுதியே.
இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.கணிமேதை என்றும் இவர் வழங்கப் பெறுவர். கணிமேதை என்பது கொண்டு சோதிட நூற் புலமை மிக்கார் இவர்என்று கொள்வாரும் உண்டு. நூலின் முதற்கண் அருகக்கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையினாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப்பெறுதலினாலும், இவரைச் சைன சமயத்தவர் என்று கொள்ளலாம். இவர் சைனரில் ஒரு சிலரைப் போலத் துறவறத்தையே வற்புறுத்தாது,
மனைவாழ்க்கை மா தவம் என்றிரண்டும் மாண்ட
வினைவாழ்க்கையாக விழைப (73)
என இல்லற துறவறங்களை ஒரு நிகராகப்போற்றியுள்ளமையும் நோக்கத்தக்கது. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பதுமுன்பே கண்டோம். திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.
இவரது நூல் இல்லற நூலாயும், துறவறநூலாயும், வீட்டு நெறி நூலாயும் உள்ளது என்று சிறப்புப்பாயிரச் செய்யுள் புகழ்கிறது. ‘பொய் தீர் புலவர்’எனத் தொடங்கும் 66-ஆம் பாடல்,
பொய் இல் புலவர் புரிந்து உறையும்மேல் உலகம்
ஐயம் ஒன்று இன்றி அறிந்து உரைப்பின், வெய்ய
பகல் இன்று, இரவு இன்று, பற்று இன்று, துற்று இன்று,
இகல் இன்று, இளிவரவும் இன்று
என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலோடு (பொதுவியல்4) பெரிதும் ஒப்புமையுடையது. வடமொழி ஸ்மிருதி நூல்களில் வழங்கும் துவாதச புத்திரர்களைப் பற்றி,
‘மாண்டவர் மாண்ட’ (30), மத்த மயில் அன்ன’ (31) எனவரும் இரண்டு பாடல்களிலும் உரைத்துள்ளார். வடமொழியாளரின் பழக்கவழக்கங்களை உணர்த்தும் இச் செய்தியை ஆசிரியர் கூறியுள்ளமையால், வடமொழிக் கலப்பு மிகுதிப்பட்டபிற்காலத்தே இந் நூல் தோன்றியதாதல் கூடும் என்று ஊகிக்கலாம்.
இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன. சிறுபஞ்சமூலப் பாடல்களினும் இந்நூற் பாடல்கள் பொருள் தெளிவின்றியுள்ளன. ஆறுபொருள்களை நான்கு அடிப் பாடலில் அடக்கும் இந் நூலிலும் மகடூஉ முன்னிலைகளைச் சிற்சில பாடல்களில் ஆசிரியர் மேற்கொள்ளுதல் பொருளை மேலும் குறுக்கிவிடுகிறது. இந் நூலைப் பற்றிய சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றுஉள்ளது. இப் பாடல் நூலின் இறுதியில் தரப் பெற்றிருக்கிறது
இந் நூலுக்குப் பழைய உரை உண்டு. இவ்உரை முதலில் எட்டுப் பாடல்களுக்கும் பின்னரும் இடையிடையே சிற்சில பாடல்களுக்கும் கிடைக்கவில்லை. அப்பகுதிகள் சிதைவு பட்டிருக்கலாம். உரையின் துணைகொண்டே இந் நூற் பாடல்களில் அமைந்துள்ள ஆறு பொருள்களையும் தெளிவுறத் தெரியலாம். இங்ஙனம் நூற் பொருளை அறிதற்குக் கருவியாய்த் துணைபுரிவது இப் பழைய உரை.
Reviews
There are no reviews yet.